ஸ்ரீமத் பகவத்கீதை
அத்தியாயம் 1
அர்ஜுனனின் துயரம் (அர்ஜுன விஷாத
யோகம்)
( மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்,
திருதராஷ்டிரர் போர்க்களத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ள
விரும்புகிறார். அதற்காக, அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரரான ஸஞ்சயனுக்கு,
வியாசர் திவ்ய த்ருஷ்டியை வழங்குகிறார். அதன் மூலம் போர்க்களத்தின் எந்தப்
பகுதியில் எது நடந்தாலும் அதை நேரில் பார்ப்பது போல் ஸஞ்சயனால் மனக் கண்ணில்
பார்க்க முடிகிறது. இருந்த இடத்திலிருந்தே, அங்கு நடந்தவைகளை அவர்
த்ருதராஷ்டிரருக்கு வர்ணிக்கிறார்.
பகவத்கீதையின் முதல் ஸ்லோகத்தில்
மட்டும் தான் த்ருதராஷ்டிரர் பேசுகிறார். மற்ற அனைத்து ஸ்லோகங்களும் ஸஞ்சயனின்
வாய் மூலமான வர்ணனை தான். நடு நடுவில், அர்ஜுனன், க்ருஷ்ணன் ஆகியோர் பேசுவதை,
அவர்களுடைய சொற்கள் மூலமாகவே ஸஞ்சயன்
விவரிக்கிறார்.
தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில்
என் புதல்வர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள் என்று த்ருதராஷ்டிரன்
கேட்கவும், ஸஞ்சயன் பேசத் தொடங்குகிறார். துர்யோதனன் பீஷ்மரிடம் பேசியதையும்,
தனக்குத் தேரோட்டியாக இருந்த க்ருஷ்ணனிடம் அர்ஜுனன் தேரை இரண்டு சேனைகளுக்கும்
இடையே நிறுத்தச் சொன்னதையும், க்ருஷ்ணர் அவ்வாறே செய்ததையும், இரண்டு அணிகளிலும்,
தனது நண்பர்களும் உறவினர்களுமே இருப்பதைக் கண்ட அர்ஜுனன் இவர்களையெல்லாம் கொன்று,
அதனால் கிடைக்கும் ஆட்சி ரத்தக் கறை படிந்ததாக இருக்கும் என்று எண்ணுவதையும்,
தாங்க முடியாத மனக் கலக்கம் அடைந்த அவன் க்ருஷ்ணரிடம், தன்னால் போர் புரிய இயலாது
என்று கூறுவதையும் விவரிக்கிறார்.)
1. धृतराष्ट्र
उवाच
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः।
मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय।।1.1।।
திருதராஷ்டிரர் கேட்டார்: “சஞ்சயனே! போரிட விரும்பி, புனிதமான
குருக்ஷேத்திரத்தில் கூடிய என் மகன்களும், பாண்டுவின் மகன்களும் என்ன செய்தார்கள்?
2. सञ्जय
उवाच
दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा।
आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत्।।1.2।।
சஞ்சயன்
கூறினார்: “அணிவகுத்து நின்றிருந்த பாண்டவர்கள் சேனையைப் பார்த்த துரியோதனன் தன் குருவான
துரோணாச்சாரியரை நெருங்கிப் பேசத்தொடங்கினான்.
3. पश्यैतां
पाण्डुपुत्राणामाचार्य महतीं चमूम्।
व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता।।1.3।।
“மரியாதைக்குரிய
குருவே! தங்களுடைய திறமை மிக்க சீடனான த்ருபதனின் மகனால் (த்ருஷ்டத்யும்னன்)
மிகச்சிறந்த முறையில் அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டவர்களின் சேனையைப்பாருங்கள்!
4. अत्र
शूरा महेष्वासा भीमार्जुनसमा युधि।
युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः।।1.4।।
அவர்களுடைய
அணியில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான போர்த்திறமையுள்ள யுயுதானன், விராடன்,
த்ருபதன் போன்ற வலிமை மிக்க போர்வீரர்களைப் பாருங்கள்!
5. धृष्टकेतुश्चेकितानः
काशिराजश्च वीर्यवान्।
पुरुजित्कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः।।1.5।।
மேலும்,
த்ருஷ்டகேது, சேகிதானன், காசியின் அரசன், புருஜித், குந்திபோஜன், சைப்யன் போன்ற
மிகவும் திறமை வாய்ந்த வீரர்களும் இருக்கிறார்கள்.
6. युधामन्युश्च
विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान्।
सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथाः।।1.6।।
இவர்கள் மட்டுமன்றி, தைரியசாலியான யுதாமன்யு, வீரம் நிறைந்த
உத்தமௌஜன், சுபத்திரையின் மகன், திரௌபதியின் மகன்கள் முதலிய சிறந்த
வீரத்தலைவர்களும் இருக்கிறார்கள்.
7.
अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम।
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान्ब्रवीमि ते।।1.7।।
அந்தணர்களுள் சிறந்தவரே! நம் அணியில் உள்ள, படையைத்தலைமை ஏற்று
நடத்துவதில் திறமை மிக்க, முக்கிய படைத்தலைவர்களைப்பற்றியும் கேளுங்கள்! நான்
அவர்களைப்பற்றி உங்களுக்குக்கூறுகிறேன்.
8.
भवान्भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः।
अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च।।1.8।।
எப்போதும் போரில் வெற்றியே காணும், தங்களைப் போன்ற பீஷ்மரும், கர்ணனும், க்ருபரும்,
அஸ்வத்தாமாவும், விகர்ணனும், பூரிஸ்ரவாவும் உள்ளனர்.
9.
अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः।
नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः।।1.9।।
எனக்காக உயிரையே
கொடுக்கக்கூடியவர்களும், போர்க்கலையில் சிறந்தவர்களும், பலவிதமான ஆயுதங்களை
உடையவர்களுமான வீரர்கள் இருக்கிறார்கள்.
10.अपर्याप्तं
तदस्माकं बलं भीष्माभिरक्षितम्।
पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम्।।1.10।।
பீஷ்ம பிதாமகரால் தலைமை தாங்கி வழி
நடத்தப்படும் நமது சேனையின் வலிமை அளவிடற்கரியது. ஆனால், பீமனால் வழி நடத்தப்படும்
பாண்டவர்களது சேனையோ அளவுக்கடங்கியது தான்.
11.अयनेषु
च सर्वेषु यथाभागमवस्थिताः।
भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि।।1.11।।
ஆகவே கௌரவர்களின் சேனைத்தலைவர்கள்
தங்கள் முக்கிய நிலைகளைப் பாதுகாப்பதுடன், பாட்டனார் பீஷ்மபிதாமகருக்கு முழு ஆதரவு
கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
12.तस्य
संजनयन्हर्षं कुरुवृद्धः पितामहः।
सिंहनादं विनद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान्।।1.12।।
அதையடுத்து, துரியோதனனை மகிழ்விக்கும் பொருட்டு, குரு
வம்சத்தின் மூத்த தலைமகனான பீஷ்ம பிதாமகர், சிங்கத்தைப்போல கர்ஜனை செய்து, தன்
சங்கை எடுத்து உரக்க முழங்கினார்.
13. ततः
शङ्खाश्च भेर्यश्च पणवानकगोमुखाः।
सहसैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलोऽभवत्।।1.13।।
பிறகு,
சங்குகளும், முழவுகளும், கொம்புகளும் ஒரே நேரத்தில் ஒலிக்கவே, அவைகளின் ஒட்டு
மொத்தப் பேரொலி அங்கே எழுந்தது.
14. ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ।
माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः।।1.14।।
பின்னர்,
பாண்டவர் அணியில் இருந்து, வெண்புரவிகள் பூட்டிய தங்கள் தேரில் அமர்ந்து கொண்டு,
மாதவனும், அர்ஜுனனும் தங்கள் தெய்வீகமான சங்குகளை முழங்கினர்.
15. पाञ्चजन्यं हृषीकेशो देवदत्तं धनंजयः।
पौण्ड्रं दध्मौ महाशङ्खं भीमकर्मा वृकोदरः।।1.15।।
ஹ்ருஷீகேசன் தன்னுடைய ‘பாஞ்சஜன்யம்’
என்னும் சங்கையும், அர்ஜுனன் ‘தேவதத்தம்’ என்னும் சங்கையும் முழங்கினர். உண்பதில்
பேரார்வம் கொண்டவனும், பராக்கிரமம் மிக்க செய்ல்களைச் செய்யக் கூடியவனுமான பீமன்
‘பௌண்ட்ரம்’ என்னும் தனது மகத்தான சங்கை முழங்கினான்.
16. अनन्तविजयं
राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः।
नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ।।1.16।।
அரசே! குந்தியின் மகனான மன்னர் யுதிஷ்டிரர் ‘அனந்தவிஜயம்’ என்ற
சங்கையும், நகுலனும், சகாதேவனும் முறையே, ‘சுகோஷம்’, ‘மணிபுஷ்பகம்’ ஆகிய
சங்குகளையும் முழங்கினர்.
17. काश्यश्च
परमेष्वासः शिखण्डी च महारथः।
धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः।।1.17।।
மிகச்சிறந்த வில் வீரனான, காசியின் அரசன், சிறந்த போர் வீரனான
சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன், எவராலும் வெல்ல முடியாத சாத்யகி,
18. द्रुपदो
द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते।
सौभद्रश्च महाबाहुः शङ्खान्दध्मुः पृथक्पृथक्।।1.18।।
த்ருபதன், திரௌபதியின் ஐந்து
புதல்வர்கள், வலிமை பொருந்திய ஆயுதங்களை ஏந்திய சுபத்திரையின் மகன் அபிமன்யு
ஆகியோரும் தங்கள் தங்கள் சங்குகளைத் தனித்தனியே முழங்கினார்கள்.
19. स घोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत्।
नभश्च पृथिवीं चैव तुमुलो व्यनुनादयन्।।1.19।।
அந்தப் பேரொலியானது விண்ணிலும் மண்ணிலும், பேரிடி போல் ஒலித்துத் தங்கள் புதல்வர்களின்
நெஞ்சங்களச் சுக்கு நூறாக்கியது.
20. अथ व्यवस्थितान् दृष्ट्वा धार्तराष्ट्रान्कपिध्वजः।
प्रवृत्ते शस्त्रसंपाते धनुरुद्यम्य
पाण्डवः।।1.20।।
அரசே! அப்போது, தன்னுடைய தேரின் கொடியில் அனுமனை
வைத்துக்கொண்டுள்ள, பாண்டுவின் புதல்வனான அர்ஜுனன், தங்கள் சேனை அணிவகுத்து
நிற்பதைப்பார்த்துத், தன் வில்லை எடுத்து,
ஸ்ரீ க்ருஷ்ணரிடம் இவ்வாறு கூறினான்.”
21. अर्जुन उवाच
हृषीकेशं तदा वाक्यमिदमाह महीपते।
सेनयोरुभयोर्मध्ये रथं स्थापय मेऽच्युत।।1.21।।
“தன் நிலையில் இருந்து வழுவாத அச்யுதனே! என்னுடைய தேரை இரண்டு
சேனைகளுக்கும் இடையில் கொண்டு சென்று நிறுத்துவாயாக!
22. यावदेतान्निरीक्षेऽहं योद्धुकामानवस्थितान्।
कैर्मया सह योद्धव्यमस्मिन्रणसमुद्यमे।।1.22।।
யாரெல்லாம் போரிட
விரும்பி வந்துள்ளார்கள் என்று பார்க்கிறேன். இந்தப்பெரும் போரில் நான் யாருடன்
எல்லாம் போரிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.”
23. योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागताः।
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षवः।।1.23।।
துர்புத்தியுடைய துர்யோதனனை மகிழ்விக்க வேண்டி அவனுக்காகப்
போரிட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பார்க்கிறேன்.”
24. संजय उवाच
एवमुक्तो हृषीकेशो गुडाकेशेन भारत।
सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम्।।1.24।।
ஸஞ்சயன் கூறினார்: “ திருதராஷ்டிரரே!
உறக்கத்தை வென்ற அர்ஜுனன் இவ்வாறு கூறியதும், ஸ்ரீ கிருஷ்ணர் அந்த இரண்டு
சேனைகளுக்கு நடுவில் தன் மகத்தான தேரைச் செலுத்தி நிறுத்தினார்.
25. भीष्मद्रोणप्रमुखतः सर्वेषां च महीक्षिताम्।
उवाच पार्थ पश्यैतान्समवेतान्कुरूनिति।।1.25।।
பீஷ்மர், துரோணாச்சாரியர் மற்றும்
பிற அரசர்களின் முன்னிலையில், ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “பார்த்தனே! இங்கு
கூடியுள்ள குருவம்சத்தைச் சேர்ந்தவர்களைப் பார்!”
26. तत्रापश्यत्स्थितान्पार्थः पितृ़नथ पितामहान्।
आचार्यान्मातुलान्भ्रातृ़न्पुत्रान्पौत्रान्सखींस्तथा।।1.26।।
அங்கே, அர்ஜுனன், தன் தந்தையரையும்,
பாட்டன்மாரையும், ஆசிரியர்களையும், அம்மான்மாரையும், சகோதரர்களையும்,
பங்காளிகளையும், புதல்வர்களையும், சகோதர சகோதரியரின் புதல்வர்களையும்,
பேரன்மாரையும், நண்பர்களையும்,
27. श्वशुरान्सुहृदश्चैव सेनयोरुभयोरपि।
तान्समीक्ष्य स कौन्तेयः सर्वान्बन्धूनवस्थितान्।।1.27।।
மாமனார்மாரையும், நலம் விரும்பிகளையும் பார்த்தான். இரண்டு
சேனைகளிலும் இருந்த அனைத்து உறவினர்களையும் பார்த்த குந்தியின் புதல்வனான
அர்ஜுனன்,
28. अर्जुन उवाच
कृपया परयाऽऽविष्टो विषीदन्निदमब्रवीत्।
दृष्ट्वेमं स्वजनं कृष्ण युयुत्सुं समुपस्थितम्।।1.28।।
இரக்கமும், ஆழ்ந்த வருத்தமும் மேலிட,
கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறினான். “கிருஷ்ணா! போருக்காக அணிவகுத்து,
ஒருவரையொருவர் கொல்வதற்குத் தயாராய் இருக்கும் என் உறவினர்களைப் பார்த்து,
29. सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते।।1.29।।
என் கை கால்கள் செயலிழக்கின்றன; என்
வாய் உலர்ந்து போகிறது. என் உடல்
முழுவதும் நடுங்குகிறது. என் முடி குத்திட்டு நிற்கிறது.
30. गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः।।1.30।।
என் வில்லான காண்டீவம் என் பிடியில் இருந்து நழுவுகிறது. என்
தோல் முழுவதும் எரிகிறது. என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. என் தலை
சுற்றுகிறது. என்னால் நிலையாக நிற்க முடியவில்லை.
31. निमित्तानि च पश्यामि विपरीतानि केशव।
न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्वजनमाहवे।।1.31।।
கிருஷ்ணா! கேசி என்னும் அசுரனைக்கொன்ற கேசவா! கெடுதல்
வரப்போவதற்கான நிமித்தங்களையே காண்கிறேன். என் சொந்த உறவினர்களை இந்தப்போரில் கொல்வதால்
என்ன நன்மை விளைந்து விடும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.
32. न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च।
किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन
वा।।1.32।।
கிருஷ்ணா! எனக்கு வெற்றியோ, அரசோ, அல்லது அதனால்
கிடைக்கப்போகும் இன்பமோ, வேண்டாம். கோவிந்தா! அப்படிக்கிடைக்கும் போகங்களாலோ,
வாழ்க்கையாலோ, என்ன பயன்?
33. येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च।
त इमेऽवस्थिता युद्धे प्राणांस्त्यक्त्वा
धनानि च।।1.33।।
நாம் யாருக்காக இந்த அரசையும், இன்பங்களையும்,
இந்த வாழ்க்கையையுமே விரும்புகிறோமோ, அவர்களே தங்களது செல்வங்களையும், உயிரையும்
துறக்கத் தயாராய் நமக்கு எதிராகப் போர் புரிய நிற்கும் போது,
34. आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः।
मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा।।1.34।।
என் ஆசிரியர்கள், தந்தையர், மகன்கள், பாட்டன்மார்,
அம்மான்மார், பேரன்மார், மாமனார்மார், சகோதர சகோதரியரின் மகன்கள், மைத்துனர்கள்,
யாவரும் தங்கள் உயிரையும் உடைமைகளையும் பணயம் வைத்து இங்கே நிற்கிறார்கள்.
35. एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन।
अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महीकृते।।1.35।।
ஓ மதுசூதனா! அவர்கள்
என்னைத் தாக்கினாலும், நான் அவர்களைக்கொல்ல விரும்பவில்லை. மூவுலகத்தின்
அதிகாரத்தையும் பெற்றாலும், நான்
அவர்களைக் கொல்ல விரும்பவில்லை என்றபின்,
இந்தப்பூவுலகு எம்மாத்திரம்?
36.
निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन।
पापमेवाश्रयेदस्मान्हत्वैतानाततायिनः।।1.36।।
உயிர்களனைத்தையும் பராமரிப்பவனே!
திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொல்வதனால் நமக்கு என்ன இன்பம் கிடைக்கும்?
அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்த போதிலும், அவர்களைக் கொல்வதால் நமக்குப் பாவம்
தான் வரும்.
37.
तस्मान्नार्हा वयं हन्तुं धार्तराष्ट्रान्स्वबान्धवान्।
स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव।।1.37।।
ஆகவே, நம் பங்காளிகளான
திருதராஷ்டிரரின் புதல்வர்ளையும், பிற நண்பர்களையும் கொல்வது நமக்கு உகந்ததல்ல. ஓ
மாதவா! நம் உறவினர்களைக் கொன்று விட்டு நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க
முடியும்?
38. यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः।
कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम्।।1.38।।
பேராசை வசப்பட்ட அவர்களுக்குத் தன்
உறவினர்களை அழிப்பதோ, நண்பர்களுக்கு துரோகம் செய்வதோ தவறாகப்படவில்லை.
39. कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम्।
कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन।।1.39।।
ஆனாலும், ஓ ஜனார்த்தனா! நம்
உறவினர்களைக் கொல்வது பெரிய குற்றம் என்று உணர்ந்த நாம் ஏன் இந்தப்பாவத்தில்
இருந்து விலகக்கூடாது?
40. कुलक्षये प्रणश्यन्ति कुलधर्माः सनातनाः।
धर्मे नष्टे कुलं कृत्स्नमधर्मोऽभिभवत्युत।।1.40।।
ஒரு வம்சம் அழிக்கப்படும் போது, அதன்
பாரம்பரியங்கள் அழிக்கப்படும். மீதியுள்ள குடும்பம் தர்மத்திலிருந்து
விலகிப்போகும்.
41. अधर्माभिभवात्कृष्ण
प्रदुष्यन्ति कुलस्त्रियः।
स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः।।1.41।।
தீமை முன்னுரிமை பெறும் போது, பெண்கள் ஒழுக்கம் கெடுவார்கள்.
வ்ருஷ்ணி வம்சத்தவனே! பெண்கள் ஒழுக்கம் கெட்டால் விரும்பத்தகாத குழந்தைகள்
பிறப்பார்கள்.
42. सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च।
पतन्ति पितरो ह्येषां लुप्तपिण्डोदकक्रियाः।।1.42।।
விரும்பத்தகாத குழந்தைகளால், அந்தக்குடும்பமும்,
அந்தக்குடும்பத்தை அழித்தவர்களுடைய குடும்பமும் நரகத்தைப்போன்ற வாழ்க்கை வாழவேண்டி
வரும். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பிண்டம், தண்ணீர் முதலியன கிடைக்காமல், அந்த
வீழ்ச்சியடைந்த குடும்பத்தின் முன்னோர்களும் வீழ்வார்கள்.
43. दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः।
उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च
शाश्वताः।।1.43।।
குடும்ப பாரம்பரியத்தை அழிப்பவர்களின் தீய செயல்களால், வேண்டாத
குழந்தைகள் உருவாவது மட்டுமன்றிச் சமூகத்துக்கும், குடும்பத்துக்கும் நன்மை
பயக்கும் பலவிதமான செயல்பாடுகளும் அழிந்து போகும்.
44. उत्सन्नकुलधर्माणां मनुष्याणां जनार्दन।
नरकेऽनियतं वासो भवतीत्यनुशुश्रुम।।1.44।।
ஓ ஜனார்த்தனா! குடும்ப பாரம்பரியத்தை அழிப்பவர்கள் எல்லையற்ற
காலத்துக்கு நரகத்தில் உழல்வார்கள் என்று கற்றவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
45. अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयम्।
यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः।।1.45।।
ஐயகோ! இப்படிப்பட்ட கொடூரமான
பின்விளைவுகளைக்கொண்ட பெரிய பாவத்தை நாம் செய்யத் துணிந்தது என்ன விந்தை! அரச
இன்பங்களுக்காக, நம் உறவினர்களைக் கொல்லத் துணிந்து விட்டோம்.
46. यदि मामप्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः।
धार्तराष्ट्रा रणे हन्युस्तन्मे क्षेमतरं
भवेत्।।1.46।।
இதை விட ஆயுதம் இன்றி, எந்த
எதிர்ப்பும் இன்றி, திருதராஷ்டிரரின் புதல்வர்கள் மூலம் நான் ஆயுதங்களால் கொல்லப்படுவதே
சிறந்ததாக இருக்கும். “
47. सञ्जय
उवाच
एवमुक्त्वाऽर्जुनः संख्ये रथोपस्थ उपाविशत्।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः।।1.47।।
சஞ்சயன் கூறினார்:
“இவ்வாறு சொல்லிக்கொண்டே, அர்ஜுனன் தன் வில்லையும்
அம்புகளையும் தூர வைத்து விட்டு, மிகுந்த மனவேதனையுடனும், தாங்க முடியாத
துயரத்துடனும், தன் தேரில் சரிந்தான்.
சுபம்
No comments:
Post a Comment